தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல்!
2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு இன்று (மார்.14) தாக்கல் செய்கிறது. இரண்டாவது முறையாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த ஆட்சியின் கடைசி முழுமையான பட்ஜெட் தாக்கல் இது என்பதால், பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையையும், அதில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற கோரிக்கைகள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கைகளை நிதிநிலை அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாளை வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.