சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் பிரமோற்சவ திருவிழா!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் தளமாகவும், முருக பெருமான் செல்வ முத்துக்குமார சுவாமியாகவும், சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரியும் தனி சன்னிதி கொண்டு அருள்பாளிக்கின்றனர்.
இந்த கோயிலில் பிரமோற்ச்சவ திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான நேற்று இரவு தெருவடைச்சான் என்கிற சகோபுர வீதி உலா நடைபெற்றது. கோயிலில் பஞ்சமூர்த்திகள் சகோபுரத்தில் எழுந்தருள மகா தீபாராதனை உடன் வீதி உலா நடைபெற்றது.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்தனர். இந்த திருவிழாவில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டினர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.