திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா - தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனிபகவான் ஆலயம் அமைந்துள்ளது. இந்த நிலையில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா மே 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோவிலின் பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலைச் சப்பரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா முன்னிட்டு கேரள பாரம்பரிய செண்டை மேளம் முழங்க வீதியுலா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் சோம சேகர அப்பாராவ், ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சகோபுர சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருத்தேரோட்டம் 6ம் தேதியும், 07ம் தேதி ஸ்ரீ சனிபகவான் தங்ககாக்கை வாகனத்தில் வீதியுலாவும், 08ம் தேதி தெப்போற்சவம் நடைபெற உள்ளது.