முன்னாள் காதலியை டார்ச்சர் செய்த காதலன் - நண்பர்களுடன் சேர்ந்து கணவன் வெறிச்செயல்!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மேலமூங்கிலடி கிராமத்தின் எல்லை பகுதியான வெள்ளாறு பகுதியில் வெட்டு காயங்களுடன் இளைஞரின் சடலம் கிடப்பதாக சிதம்பரம் தாலுக்கா போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துவக்கினர்.
விசாரணையில் உயிரிழந்த இளைஞர் சிதம்பரம் அருகே உள்ள சாலையான் தோப்பு பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவரின் மகன் பாலகணபதி 22 என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது புவனகிரி, விருதாச்சலம், உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை செய்ததில் மேல மூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு காதலித்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில் பாலகணபதி அவ்வப்போது தொலைபேசியில் ஐஸ்வர்யாவுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அடிக்கடி வீட்டிற்கு சென்றும் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா தனது கணவரான வினோத் குமாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து வினோத்குமார் பாலகணபதியை கண்டித்து உள்ளார். ஆனால் அதையும் மீறி பாலகணபதி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வினோத்குமார் அவரது நண்பர்களான ஸ்ரீராம், கதிர், ஆகியோருடன் சேர்ந்து பாலகணப்பதியை மது அருந்தலாம் என மேல மூங்கிலடி வெள்ளாறு பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் போதை தலைகேறியவுடன் 3 பேரும் பாலகணபதியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இரவு நேரத்தில் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து வினோத்குமார் அவரது நண்பர்களான ஸ்ரீராம், கதிர், ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.