சிறுவன் கடத்தல் வழக்கு | பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன்... உச்சநீதிமன்றம் அதிரடி!
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டார். மேலும், கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்தார். ஜெயராமிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின்பு அவரை விடுவித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்படட உத்தரவை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். அதன்படி, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அந்த முன்ஜாமீன் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெகன் மூர்த்தி தரப்பு மூத்த வழக்கறிஞர் சிதார்த் லூத்ரா,"இந்த விவகாரத்தில் மனுதாரர் விசாரணைக்காக காவல்துறை முன்பு ஆஜராகியுள்ளார். மேலும் இந்த கடத்தல் விவகாரத்தில் மனுதாரருக்கு சம்பந்தம் இல்லை. கடத்தப்பட்ட நபர் மனுதாரர் வசமோ அல்லது அவரின் இடத்திலோ மீட்கப்படவில்லை, அப்படி இருக்கையில் இந்த சம்பவத்தில் இவருக்கு சம்மந்தம் உள்ளது என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது" என வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள், இந்த வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தெரிவித்தார். மேலும், பூவை ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ரூ.25,000 பிணைத்தொகை கட்டி வழக்கமான ஜாமினை பெறவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.