பாகிஸ்தானிடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் விடுதலை!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி-வாகா எல்லை மூடல் என மத்திய அரசு அதிரடி முடிவுகளை எடுத்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
அந்த சூழலில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா அடாரி வாகா எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எல்லை தாண்டியதாக அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். அவரை மீட்க இந்தியா சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனிடையே, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. அதே சமயம் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. இதையடுத்து, பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு போர் முடிவுக்கு வந்தது.
இதற்கிடையில், சுமார் 20 நாட்களுக்கு மேலாக பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள தனது கணவரை மீட்டு தருமாறு எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷாவின் 7 மாத கர்ப்பிணி மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் பஞ்சாபில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் இன்று காலை 10.30 மணிக்கு பூர்ணம் குமார் ஷாவை இந்தியாவிடம் ஒப்படைத்ததாக எல்லை பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்தியாவிடம் சிக்கியுள்ள பாகிஸ்தான் வீரரும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.