துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் - புதுச்சேரியில் பரபரப்பு!
புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் உள்ளது துணைநிலை ஆளுநர் மாளிகை. இன்று(ஏப்ரல்.14) பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தற்போது ஆளுநர் மாளிகையில் ஓய்வுவெடுத்து வருகிறார்.
இந்நிலையில் மர்ம நபர்கள் ஆளுநர் மாளிகை மின்னஞ்சல் முகவரிக்கு இ-மெயில் மூலமாக ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி உடனடியாக, வெடிகுண்டு மிரட்டல் குறித்து பெரியகடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தற்போது ஆளுநர் மாளிகை முழுவதும் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் ஆளுநர் மாளிகை சுற்றியுள்ள சாலைகள், இணைப்பு சாலைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து போலீசார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு சிறையில் இருந்துகொண்டே ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களுக்கு சிறைக்கைதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நேற்று தலைமை தீயணைப்பு நிலையம் மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களிலும் இ-மெயில் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், ஆளுநர் மாளிகை உள்ளே இருக்கக்கூடிய சூழலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.