பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதனிடையே டாக்டர் ராமதாசின் ஆதரவாளரான ஆடுதுறை சேர்மன் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது.
இதனால் டாக்டர் ராமதாசிற்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், அவரது வீட்டு வாசலில் மெட்டல் டிடக்டர் வசதியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பினர் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை இ-மெயில் மூலம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதனையடுத்து விழுப்புரத்தில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் தைலாபுரம் வீட்டிற்கு விரைந்து சென்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.