சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணி அளவில், இமெயில் ஒன்று வந்தது. அதில் சென்னை விமான நிலையத்தில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன எனவும், அந்த குண்டுகள் வெடித்து சிதறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் வேறு எந்த தகவலும் இல்லாமல், மொட்டையாக இமெயில் வந்திருந்தது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம், விமான நிலைய இயக்குனர் தலைமையில் நடத்தபட்டது. அக்கூட்டத்தில் விமான பாதுகாப்பு துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிறுவனங்களின் அதிகாரிகள், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீஸ் அதிகாரிகள் அதிரடி படையினர் உட்பட பாதுகாப்பு குழு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மிரட்டல் இ-மெயில், எந்த ஒரு விமானத்தையோ, விமான நிலையத்தின் குறிப்பிட்ட பகுதியையோ குறிப்பிடாமல் வந்திருந்ததால் கூடுதல் கண்காணிப்புகளுடன், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. விமானங்களில் ஏற்றப்படும் பார்சல்கள், எரிபொருள் நிரப்பும் இடங்கள், விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் பகுதி ஆகிய இடங்களிலும் தீவிர சோதனைகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், விமான நிலைய போலீசார் உட்பட அனைவரும் பகல் 1 மணி வரையில் தீவிரமாக சோதனைகள் நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், இது வழக்கமாக வரும் புரளி தான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது மர்ம இமெயில் மிரட்டல் தகவல், வெளிநாட்டில் இருந்து, போலி ஐடியில் வந்திருப்பது தெரியவந்தது.