நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!...
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுள்ளது.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் மாயமான நிலையில், தனது தந்தையை காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதற்கிடையே, பாதி எரிந்த நிலையில் கரைச்சுற்றுப்புதூரில் உள்ள தோட்டத்தில் சடலமாக ஜெயக்குமார் நேற்று மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ஜெயக்குமார் ஏற்கனவே, தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் கேவி.தங்கபாலு பெயர்களை குறிப்பிட்டிருந்ததும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகார் கடிதத்தை அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் ஆன்லைன் வழியாக அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக, உவரி காவல்நிலையம் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, அவரது உடலுக்கு முன்னாள் காங்கிரஸ் எம்.பி ராமசுப்பு மற்றும் அவரது உறவினர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ஜெயக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுள்ளது. மேலும் அவரது உடல் இன்று காலை 10 மணிக்கு அவருடைய சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.