விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று ஏர் இந்தியா 171 விமானம் புறப்பட்டது. 242 பேருடன் புறப்பட்ட இந்த விமானம் சில நிமிடங்களில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மருத்துவ மாணவர்கள் விடுதியில் விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்க, இதுவரை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட 265 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இந்த விபத்தில் ஒரு புறம் மீட்பு பணிகள் நடந்த நிலையில், மறுபுறம் விபத்துக்கான காரணத்தை தேடி, புலனாய்வு பிரிவினர் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடி வந்தனர். இந்த நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இந்த கருப்பு பெட்டி அடுத்ததாக விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் கீழ் செயல்படும் தடயவியல் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கருப்பு பெட்டி : இந்த கருப்பு பெட்டி மூலம் துயரச் சம்பவத்திற்கு காரணம் இயந்திரக் கோளாறா? பறவைகள் மோதியதா? விமானத்தில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது அங்குள்ளவர்கள் செய்த தவறா? கண்டறிய முடியும். மேலும் இது MAYDAY அழைப்பு, பெறப்பட்ட ஏதேனும் தானியங்கி எச்சரிக்கைகள் மற்றும் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதற்கான அவர்களின் நடவடிக்கைகள் பற்றிய விரிவான நுண்ணறிவுகளை வழங்கும்.
ஏர் இந்தியா171 விமானம் வெறும் 625 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால், விமானத்தின் தரவுகள், செயல் திறன், குரல் பதிவுகள் ஆகியவற்றை கருப்பு பெட்டி மூலம் கண்டறிய முடியும். அத்துடன் அவசரகால சரிபார்ப்புப் பட்டியல்களைப் பணியாளர்கள் பின்பற்றினார்களா?, அவர்கள் தங்கள் பதிலை எவ்வாறு ஒருங்கிணைத்தனர், ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் விவாதிக்கப்பட்டனவா? என்பதையும் கருப்பு பெட்டி வெளிப்படுத்தக்கூடும்.