“தமிழ்நாட்டில் மக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் தற்போது தமிழ்நாட்டில் நிலவி வருகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக சட்டமன்றத்திலும் பேசி உள்ளேன். திமுக அரசால் தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி மர்மமான முறையில் இறந்தார். அந்த குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதன்பிறகு சேலம் மாநகர முன்னாள் மண்டலக்குழுத் தலைவர் சண்முகம், திமுக கட்சியினரால் ஏவப்பட்ட கூலிப்படையால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரை கொலை செய்துள்ளனர். தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதன் மூலம் சட்ட ஒழுங்கு எவ்வளவு தூரம் சீர்குலைந்துள்ளது என தெரிகிறது. மக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் தற்போது நிலை வருகிறது. காவல்துறையைக் கண்டு கொலையாளிகள் அச்சப்படும் சூழல் தற்போது இல்லை. ஜெயலலிதா இருந்தபோது ஐந்து சட்டமன்ற தேர்தல்களை புறக்கணித்தார். அதேபோன்று தான் தற்போது விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்துள்ளோம்.
வாக்காளர்களை கொடுமைப்படுத்திதான் தற்போது விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் சுதந்திரமாக நடக்க வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தி வாக்களிக்க கூறக்கூடாது. ஓபிஎஸ்ஐ கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை உடன்படாது. ஓபிஎஸ் எப்பொழுதும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருந்ததாக வரலாறு கிடையாது. ஒரு சிலரை சுட்டிக்காட்டி ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினார்.
ஆணையம் அமைக்கப்பட்டு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. கட்சியை பற்றி கவலைப்படாமல் தனது மகனை பற்றி மட்டுமே கவலைப்படுவார் ஓபிஎஸ். கட்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத சுயநலவாதி ஓபிஎஸ். ராமநாதபுரத்தில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டவர் ஓபிஎஸ். துரோகத்தின் மொத்த உருவம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அதிமுகவின் தலைவர்களை இழிவாக பேசியவர் அண்ணாமலை.
யாருக்கும் அடிமையாக இல்லாமல் அதிமுக செயல்படுகிறது. அதிமுக, பாஜக போன்று அப்பாயின்மென்ட் செய்யும் கட்சி அல்ல. கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்துதான் நீதிமன்றத்தினை நாடி உள்ளனர். விஜயபாஸ்கர் மீது பழி சுமத்தி தற்போது அவரை தேடி வருகின்றனர் காவல்துறையினர். இதே கதி திமுகவை சேர்ந்தவர்களுக்கும் விரைவில் வரும். மதுவிலக்கை படிப்படியாக தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்பதே அதிமுகவின் கோரிக்கை. அக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து மது குடிப்பவர்களை அதிலிருந்து மீட்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.