"திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்" - நயினார் நாகேந்திரன்!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நில ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் நமது பாஜகவின் மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் மணிகண்டனை திமுக பிரமுகரால் தாக்கப்பட்டுள்ள கொடூரம் கண்டனத்திற்குரியது.
ஆளும் கட்சி ஆதரவில் அரசு சொத்துகளை ஆக்கிரமிக்கும் திமுக உடன்பிறப்புகள் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மணிகண்டன் புகார் அளித்த நிலையில், பட்டப்பகலில் அவரது வீட்டு வாசலிலேயே கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் திமுக பிரமுகர் ஆறுமுகம் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இது தான் சட்டம் ஒழுங்கின் லட்சணமா? இது தான் அறிவாலயத்தின் திராவிட மாடலா?
திமுககாரன் எனும் போர்வையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முதல் உயிரைப் பறிக்கும் வரையிலான தாக்குதல் வரை அனைத்துக் குற்றச்செயல்களிலும் ஈடுபடும் உடன்பிறப்புகளை அடக்குவதை விட்டுவிட்டு, இது இரும்புக்கர ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது. தாம் வகிக்கும் பொறுப்பில் சிறிதும் அக்கறையிருந்தால், உடனடியாகக் கட்சி பேதமின்றி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்!
எத்தனைக் கொடூர தாக்குதல்களாலும் கொலை மிரட்டல்களாலும் தேசியவாதிகளை முடக்கிவிட முடியாது என்பதைத் திமுக அரசு உணரவேண்டும். திமுகவின் தில்லாலங்கடிகளை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து அஞ்சாது நாங்கள் வெளிப்படுத்துவோம்! தீயசக்தி திமுகவைத் துரத்தியடிப்போம்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.