“ஏழ்மையை ஒழிப்போம் என பாஜகவினர் ஏழைகளை கொன்று விடுகின்றனர்” - சேலத்தில் சீமான் பரப்புரை!
ஏழ்மையை ஒழிப்போம் என பாஜகவினர் ஏழைகளை கொன்று விடுகின்றனர் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் கோட்டை மைதானத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி, சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டார்.
இந்த கூட்டத்தில் சீமான் பேசியதாவது:
“கிரகணம் வரும்போது சூரியனை பார்த்தால் கண் கெட்டுப்போகும். சூரியனுக்கு ஓட்டு போட்டால் நாடே கெட்டு போகும். நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் சேர வேண்டாம். பாஜகவிற்கு ஓட்டு போடாமல் இருந்தால் போதும். இந்திய நாட்டை பாஜக தான் ஆள வேண்டும் என மோடிக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா? நாட்டை நாங்களும் ஆட்சி செய்யலாம்.
வழக்கம்போல எல்லா தேர்தல்களைப் போலவும் இந்த தேர்தலையும் கடந்து போகாதீர்கள். ஆழ்ந்து சிந்தித்து வாக்களியுங்கள். இப்படியே விட்டால் இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும். கிளி போன்று கூண்டுக்குள் சிக்காமல் எதிர்காலத்தை பற்றி அனைவரும் சிந்தியுங்கள். உரிமை இருந்தும் திமுக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காதது ஏன்? ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிக்கியவர்கள் வீட்டிற்கு செல்வார்கள் என்பது நாங்கள் சாதித்தோம்.
வலிமை மிக்க வாக்கு எனும் ஆயுதத்தை அநீதிக்கு எதிராக ஏந்துங்கள். இந்த நாட்டில் யாரும் சிறுபான்மை, பெரும்பான்மை கிடையாது. நரிகளுக்கு இடம் கொடுத்து நதிநீர் உரிமை உள்பட எல்லா உரிமையையும் இழந்தோம்”
இவ்வாறு சீமான் பேசினார்.