டெல்லி மதுபான கொள்கை முறைகேடு - பாஜக மீது சஞ்சய் சிங் குற்றச்சாட்டு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார்களுக்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தார்.
டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் இதன் வாயிலாக பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யான சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடந்த 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் (ஏப்.3) திஹார் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இதனிடையே இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"டெல்லி கலால் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகவ் மகுண்டாவை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தவறான தகவலை வழங்குவதற்கு பாஜக அழுத்தம் கொடுத்தது. ஆனால் ராகவ் மகுண்டா அதற்கு மறுத்துவிட்டார். இதனால் அவரது மகன் ராகவ் ரெட்டி கைது செய்யப்பட்டார். இதையடுத்து ராகவ் ரெட்டி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகப் பொய் உரைத்தார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க பெரிய சதி நடந்துள்ளது. மதுபான ஊழலுக்கு பாஜக தான் காரணம். அக்கட்சியின் மூத்த தலைமை இதில் ஈடுபட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் நேர்மையானவர். டெல்லி மக்களுக்கு நல்ல கல்வி மற்றும் நல்ல சுகாதார வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டவர் அவர்."
இவ்வாறு ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தார்.