சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் பீகார் - மத்திய பட்ஜெட்டில் அடித்த ஜாக்பாட் !
2025 -2026ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து 1 மணி நேரம் 17 நிமிடங்கள் பேசினார்.
இந்த வருட பட்ஜெட்டில் பீகார் மாநிலத்துக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பீகாரில் தற்போது பாஜகவின் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது. மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் ஆதரவில் ஆட்சியை தக்க வைத்தது.
இந்நிலையில் இந்த வருடம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பட்ஜெட்டில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது,
"பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும். பீகாரில் 4 புதிய பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும். பாட்னா விமான நிலையம் தரம் உயர்த்தப்படும். பீகார் மாநிலத்தில் உள்ள ஐஐடி பாட்னா விரிபடுத்தப்படும். 8 பீகார் மாநிலத்தில் உணவு பதனிடும் பூர்வோதயா திட்டம் செயல்படுத்தப்படும்.
பீகாரில் மாக்னா [தாமரை விதை] உற்பத்தியை அதிகரிக்க மக்கானா வாரியம் அமைக்கப்படும் உள்ளிட்ட பீகாரின் மிதிலாஞ்சல் பகுதியில் மேற்கு கோசி கால்வாய் திட்டத்திற்கு நிதி வழங்கப்படும்" என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன், அந்த மாநிலத்திற்கு மட்டும் அதிகப்படியாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.