பார்க்கிங் தகராறு - நீதிபதி மகனை தாக்கிய வழக்கில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தர்ஷன். இந்த நிலையில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் ஆகிய இருவர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே காரை பார்க் செய்வது தொடர்பான விவகாரத்தில் நீதிபதியின் மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் நீதிபதியின் மகன் அதிச்சூடி மற்றும் அவரது மனைவி லாவண்யா மாமியார் மகேஸ்வரி ஆகியோரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே நீதிபதியின் மகன் மற்றும் ஒரு பெண் காயமடைந்த நிலையில், இருவரும் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, நடிகர் தர்ஷன் நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் போலீசில் நீதிபதியின் மகன் புகார் அளித்துள்ளார்.
அதேசமயம், நடிகர் தர்ஷன் தரப்பும் புகார் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இரு தரப்பு புகார் குறித்தும் விசாரணை மேற்கொண்ட காவல்துறை நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். தற்போது இருதரப்பினரிடையே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.