பெங்களூரு வெற்றி பேரணி சம்பவம் - கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
பல வருட போராட்டத்திற்கு பிறகு, நேற்று முன்தினம் (ஜூன்.03) பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதை நேற்று முன்தினம் இரவு முதல் அந்த அணியின் ரசிகர்கள் பட்டாசு மற்றும் மேலதாளத்துடன் கொண்டாடி வந்தனர். நீண்ட நாளுக்கு பிறகு கிடைத்த முதல் வெற்றி என்பதால், பொது இடத்தில் முன்னதாக வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட பெங்களூரு அணி தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்க நேற்று 5 மணியளவில் சின்னசாமி மைதானத்தில் வெற்றிப் பேரணி நடத்த முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து, பேரணியின்போது ஏராளமான பெங்களூரு அணி ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குவியத் தொடங்கியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டுவரவும் பெரும் அசம்பாவிதத்தை தவிர்க்கவும் பெங்களூரு அணி ரசிகர்கள் மீது கர்நாடக காவல்துறையினர் தடியடி நடத்தினர். பின்னர், கூட்டம் கலைக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
அப்போது, "வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது கிரிக்கெட் சங்கமா ? அரசா? , விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?" என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது. இந்த கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வரும் 10ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பதிலளிக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.