பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் - தாமாக முன்வந்து கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணை!
17 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஆண்டின் ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் தனித்தனியாக பாராட்டு விழா நடைபெற்றது.
பெங்களூரு விதான சௌதாவின் முன்பகுதியில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில், ஆளுநர், முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விராட் கோலி மற்றும் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதனிடையே ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், விதான சௌதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை நடைபெறவிருந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. 35,000 இருக்கைகள் மட்டுமே கொண்ட சின்னசாமி மைதானத்துக்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். 33 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மன்னிப்பு கோரினார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும் கர்நாடக அரசு அறிவித்தது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு விளையாட்டிற்காக இப்படி ஒரு அசாம்பவிதம் என விமர்சமும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம். இந்த வழக்கை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றம் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.