பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ‘நீதிபதி டி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை’ - முதலமைச்சர் சித்தராமையா!
பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா உட்பட 5 காவலர்களை இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு ஒப்படைக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இதில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா,
“ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் வாரியம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதான வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்படும். இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை கைது செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விவகாரத்தில் உள்ள நடைமுறை குறைபாடுகளை ஆராய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படும்.
கடமையில் அலட்சியமாக செயல்பட்டதற்காக கப்பன்பூங்கா காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர், மாநகர உதவி காவல் ஆணையர், மாநகர காவல் துணை ஆணையர், மாநகர கூடுதல் காவல் ஆணையர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பொறுப்பின்மை, கவனக்குறைவே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய காலங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து எனக்கு தெரியாது. ஆனால் நான் எம்.எல்.ஏ ஆன பிறகு (1983), இதுபோன்ற ஒரு சம்பவம் ஒருபோதும் நடந்ததில்லை. தற்போது நடந்த இந்த சம்பவம் எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வழக்கில் இருந்து யாரும் தப்பிக்க மாட்டார்கள்” என தெரிவித்தார்.