பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ஆர்சிபி நிர்வாக மார்க்கெட்டிங் தலைவர் நிக்கில் சோசாலே உட்பட 4 பேர் கைது!
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்தில் ஆர்.சி.பி நிர்வாகம், கர்நாடகா கிரிக்கெட் வாரியம், டி.என்.ஏ எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை விசாரித்து வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, 15 நாட்களில் அறிக்கை சமர்பிக்க முதலமைச்சர் சித்தராமையா அறிவுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் பெங்களூரு கெம்பேகவுடா விமான இணையத்தில் இருந்து மும்பைக்கு தப்பிச் செல்ல முயன்ற ஆர்சிபி அணி நிர்வாகத்தின் மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசாலே, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டி.என்.ஏ எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தை சேர்ந்த சுனில் மேத்யூ உள்ளிட்ட 4 பேரை கப்பன்பார்க் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக 11 பேர் பலியான சம்பவத்தில் முறையான பாதுகாப்பு வழங்காத காரணத்தால் பெங்களூர் நகர காவல் ஆணையர் தயானந்தா ஐ.பி.எஸ், கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார், துணை காவல் ஆணையர் சேகர் ஹெச் தெக்கன்னவர், கப்பன்பார்க் உதவி காவல் ஆணையர் பாலகிருஷ்ணா, கப்பன்பார்க் காவல் ஆய்வாளர் ஏ.கே.கிரிஷ் உள்ளிட்ட 5 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.