For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Bangladesh வன்முறை - 1 மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன!

07:15 AM Aug 19, 2024 IST | Web Editor
 bangladesh வன்முறை   1 மாதத்திற்கு பிறகு பள்ளி  கல்லூரிகள் திறக்கப்பட்டன
Advertisement

வங்கதேசத்தில்  ஒரு மாதத்துக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள்  நேற்று  முதல் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் கடந்த 8ம் தேதி இரவு பதவியேற்றார். அவருக்கு அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த கலவரத்தின்போது 400-க்கும் மேற்பட்டவா்கள் கொல்லப்பட்ட நிலையில், இது தொடா்பாக அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனா மீது 3 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ச்சியான மாணவர்கள் மற்றும்  வன்முறைச் சம்பவங்கள் காரணமாக  கடந்த ஜூலை 17-ஆம் தேதி அனைத்து கல்வி நிலையங்களும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஒரு மாதத்துக்கு பிறகு கல்வி நிலையம் நேற்று  முதல் திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கதேச ஊடகங்களில் வெளியான செய்திகளில்,  நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆகஸ்ட் 18-ஆம் தேதிமுதல் வழக்கம்போல் செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன' எனத் தெரிவிக்கப்பட்டது.

வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வேலைநாள்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து வாரத்தின் முதல் நாளான நேற்று டாக்கா நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags :
Advertisement