அரசு பேருந்துகளில் பார்சல்கள் எடுத்துச் செல்லத் தடை!
அரசு பேருந்துகளில் ஆட்கள் இல்லாமல் பார்சல்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகங்கள் அறிவித்துள்ளன.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
இந்த நிலையில், அரசு பேருந்துகளில் ஆட்கள் இல்லாமல் பார்சல்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகங்கள் அறிவித்துள்ளன. போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்தில் பயணிப்பவர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருள்களுக்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருள்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.