ஹீரோவாக அறிமுகமாகும் பாலா... படத்தின் தலைப்பு வெளியானது!
ஷெரிப் இயக்கத்தில் நடிகர் பாலா ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ‘காந்தி கண்ணாடி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை நமிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ் சினிமாவில் பல முக்கியமான திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜெய்கிரண், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை தொடங்குகிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், எளிமை மற்றும் நேர்மையை பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து முடிந்தது. இறுதி கட்ட பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜெய்கிரண் கூறியதாவது,
“காந்தி கண்ணாடி என்பது எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மட்டுமல்ல, எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையை முதன்முறையாக கேட்டவுடனே என் நெஞ்சை தொட்டது போல் ஒரு உணர்வு இருந்தது. படம் முடிந்த பிறகும், ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு படமாக இது உருவாகும் என நம்புகிறேன். பாலா, ஷெரீஃப் மற்றும் மற்ற திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்ளுகிறேன். சினிமாவுக்கு மக்களைத் தூண்டும் சக்தி உண்டு – இந்தப் படத்துக்கு அந்தத் தீப்பொறி இருக்கிறது” என்றார்.
இயக்குனர் ஷெரிப் கூறியதாவது,
“ரணம் போன்ற ஒரு ஆழமான, எடையுள்ள கதைக்குப் பிறகு, நான் ஒரு நிலையான, மனதிற்கு நெருக்கமான, வாழ்க்கையைப் பற்றிய படத்தை இயக்க விரும்பினேன். ‘காந்தி கண்ணாடி’ எனக்கு மிக நெருக்கமான படம். தயாரிப்பாளர் ஜெய்கிரண், கதையை கேட்டவுடனே ‘ஆம்’ என்ற பதில் சொல்லியது எனக்கு மிக பெரிய உற்சாகத்தை அளித்தது. இது பாலா ஹீரோவாகும் முக்கியமான படமாகும், மேலும் தேசிய விருது பெற்ற பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா போன்ற முக்கிய கலைஞர்கள் இருப்பது, படத்தின் கதைக்கு மேலும் ஆழம் சேர்க்கிறது. இக்குழுவின் உற்சாகம் மற்றும் ஈடுபாடு, நாங்கள் ஒரு உண்மையான, அர்த்தமுள்ள படத்தை உருவாக்குகிறோம் என்பதை எனக்கு நம்பிக்கை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.