Bakrid 2025 | பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்… தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை!
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும்
கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம். இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
பிறை தெரிவதன் அடிப்படையிலேயே பக்ரீத் பண்டிகையும் நிச்சயிக்கப்படுகிறது. கடந்த மே28ம் தேதி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வானில் பிறை தென்பட்டது. இதனால், 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை ஜூன் 7 ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்தார்.
இதுகுறித்து, தலைமை காஜி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஹிஜ்ரி 1446 துல் கஃதா மாதம் 28 ஆம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 28-05-2025 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை சென்னையில் காணப்பட்டது. ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 29-05-2025 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) சனிக்கிழமை 07-06-2025 கொண்டாடப்படும்” என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று (ஜுன் 7) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.