அயோத்தி ராமர் நிவேதனம்: 560 கிலோ ஆக்ரா பேட்டா இனிப்பு வகைகள்!
அயோத்தி ராமர் கோயிலுக்கு 56 வகையான புகழ்பெற்ற ஆக்ராவின் பேட்டா இனிப்பு வகைகள் அளிக்கப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தவிர எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்களிக்க உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் 56 வகையான புகழ்பெற்ற ஆக்ராவின் பேட்டா இனிப்பு வகைகள் பஞ்சி பேட்டா நிறுவனத்தில் இருந்து 560 கிலோ அளவில் வந்தடைந்துள்ளது. அவை மட்டுமில்லாமல் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட ஆடை, வெள்ளி தட்டு மற்றும் பூஜை பொருள்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்தடைந்துள்ளன. ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் முன்னிலையில் இந்த அளிப்பு பெற்றுக் கொள்ளப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.