“விருதுகள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும்" - கவிஞர் வைரமுத்து
விருது சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும்; 90 வயது வரை யாரும் காத்திருக்க வயது இல்லை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மலேசியா தமிழ் சங்கத்தைச் சேர்ந்த12 பேர் அடங்கிய குழு கவிஞர் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ என்ற புத்தகத்தை ஆய்வு செய்துப் பாராட்டியுள்ளனர். ‘மகா கவிதை’ புத்தகத்திற்காக கவிஞர் வைரமுத்துவிற்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்கப்பட உள்ளது. மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியக் காப்பகமும், தமிழ்பேராயமும் இணைந்து இந்த விருதை வழங்குகிறது.
இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவுக்கு பொன்னாடை அணிவித்த மலேசிய முன்னாள் அமைச்சர், அழைப்பிதழ் வழங்கினார். அதில் வரும் மார்ச் 08- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணிக்கு மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் நடைபெறும் விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, “விருது சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். 90 வயது வரை யாரும் காத்திருக்க வயது இல்லை, பொறுமையும் இல்லை, விருது வழங்கும் நிறுவனத்திற்கு நான் வைக்கும் கோரிக்கை இல்லை, எனது ஆதங்கம். தமிழகத்தில் உள்ள பல நூல்களில், மகா கவிதை நூல் விருது பெற்றது தமிழ்யிட்ட கட்டளை என்று நான் கருதுகிறேன்.
இந்திய புத்தகத்திற்கு மலேசியா விருது வழங்க உள்ளது. ஆனால் இந்தியாவின் உயரிய விருதான ஞான பீடம் விருது, தமிழ் மொழிக்கு எத்தனை முறை ஞான பீடம் விருது வழங்கியுள்ளது? இந்தியாவின் உயரிய விருதான ஞான பீடம் இதுவரை 58 விருதுகள் வழங்கியுள்ளது.
இந்தி மொழிக்கு 11 முறையும், கன்னட மொழிக்கு 8 முறையும், மலையாளம், வங்காளம் மொழிக்கு 6, உருது மொழிக்கு 5 முறை. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு 2 முறை மட்டுமே அகிலன், ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேருக்கு மட்டுமே விருது கொடுத்துள்ளது ஞான பீடம்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.