ஆவேஷ் கான் அபாரம்... ராஜஸ்தானை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் வெளியேறினார். இவரையடுத்து களம்கண்ட நிக்கோலஸ் பூரன் 11 ரன்களிலும், ரிஷப் பண்ட் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மார்க்ரமுடன் ஆயுஷ் பதோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து ரன்களை குவித்தனர். இவர்களில் மார்க்ரம் 66 ரன்களிலும், பதோனி 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்தது. லக்னோ அணியின் அப்துல் சமத் 30ரன்களுடனும், டேவிட் மில்லர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார். அவர் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய நிதிஷ் ராணா 8 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினர். இதில் ஜெய்ஸ்வால் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரியான் பராக் 39 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து, வந்த ஷிம்ரான் ஹெட்மேயர் 12 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆவேஷ் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.