For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மதுரை எய்ம்ஸ் - ஒரு செங்கலைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை" - மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

01:09 PM Aug 02, 2024 IST | Web Editor
 மதுரை எய்ம்ஸ்   ஒரு செங்கலைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை    மக்களவையில் ஆ ராசா குற்றச்சாட்டு
Advertisement

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு செங்கலை கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை என மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா குற்றம்சாட்டினார். 

Advertisement

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் 5 ஆண்டுகள் ஆகியும் மருத்துவமனையின் சுற்றுச்சுவர்கள் மட்டுமே கட்டி முடித்ததுடன் எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

நீண்ட தாமதத்திற்குப் பிறகு 2023 ஆகஸ்ட் 17-ம் தேதி எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான விடப்பட்ட டெண்டரை எல்&டி நிறுவனம் கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் கட்டுமான பணிகளை எல்&டி நிறுவனம் தொடங்கியது. தொடர்ந்து, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக எய்ம்ஸ் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

எனவே, மே 2-ம் தேதி எய்ம்ஸ் கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்தது. இதனையடுத்து இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

இந்த சூழலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை அதிகாரப்பூர்வமாக துவக்கியதாக கடந்த மே மாதம் எய்ம்ஸ் நிறுவனம்  அறிவித்துள்ளது.  முதற்கட்டமாக மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு, தங்கும் விடுதி ஆகியவை கட்டுப்படுவதாகவும், 18 மாதங்களுக்குள் முதல்கட்ட கட்டுமான பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  இதன் திட்ட மதிப்பு ரூ.2021 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், 5,000 நோயாளிகளை பரிசோதனை செய்ய வெளி நோயாளிகள் பிரிவும் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மக்களவையில் திமுக உறுப்பினர் ஆ.ராசா,  எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார்.  அவர் பேசும்போது,  "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு செங்கலை கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை.  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால் அதற்காக நிதி ஒதுக்கப்படாமல் கட்டடம் கட்டப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.  ஆனால் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.  எய்ம்ஸ் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை, இதுதான் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்யபடும் நலனா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும்" என தெரிவித்தார்.

Tags :
Advertisement