வேற்று மத மாணவிகளுடன் பேசிய முஸ்லிம் மாணவர் மீது தாக்குதல்!
புனேவில் ஹிந்து மாணவிகளுடன் பேசியதற்காக முஸ்லிம் மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (ஏப். 7) அன்று, 19 வயதுடைய முஸ்லிம் மாணவர் ஒருவர், இரண்டு ஹிந்து மாணவிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் அந்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மாணவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்கு பிறகு தாக்கப்பட்ட மாணவர், இரண்டு மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 5 நபர்கள் ஹிந்து மாணவிகளுடன் பேசி லவ் ஜிகாத் செய்கிறாயா எனக் கூறி தாக்கியதாக மாணவர் புகார் அளித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.