'என்னை ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள்' - எடப்பாடி பழனிசாமி பேட்டி!
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்பது போலியானது. 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரமாக வாசித்துள்ளனர். வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரம் வாசித்தது மட்டுமே தி.மு.க.வின் சாதனை.
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் நெல், கரும்பு உற்பத்தி குறைந்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் பல உள்ளன. ஏற்கனவே இருந்த சாகுபடி பரப்பை 75 சதவிகிதமாக உயர்த்துவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை 37.7 சதவிகிதமாகவே உள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டம் போல் ஒரு திட்டத்தை திமுக கொண்டு வரவில்லை.
அத்திக்கடவு அவினாசியில் 2வது திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. அதனையும் திமுக அரசு கைவிட்டுள்ளது. கடன் பெற்றுதான் திட்டங்களை நிறைவேற்றும் நிலை உள்ளது. கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதுதான் திமுக அரசு செய்த சாதனையாகும். நிதி மேலாண்மையை சரி செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு என்ன செய்தது.
நிதி மேலாண்மை நிபுணர் குழு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் நிறைய கடன் வாங்கி உள்ளது. மழைநீரை சேமிக்கும் குடிமராமத்து திட்டத்தை திமுக அரசு கைவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முழுமையாக கடனில் மூழ்கியுள்ளது.
வேளாண் துறை சார்ந்த பல துறைகளை ஒன்றாக இணைத்து ஒரு பட்ஜெட்டை அறிவித்துள்ளனர். தவறு செய்ய வசதியான திட்டங்கள்தான் பட்ஜெட்டில் உள்ளன. விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான் இதில் பல உள்ளன. பட்ஜெட்டில் கூறியபடி சாகுபடி பரப்பு 1.2 சதவீதம் குறைந்துள்ளது, அதிகரிக்கவில்லை. இருபோக சாகுபடி பரப்பை உயர்த்துவதற்கு திமுக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. தமிழகத்தில் கரும்பு மற்றும் நெல் உற்பத்தி குறைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.
அப்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, என்னை சந்திக்காமல் சபாநாயகரை செங்கோட்டையன் ஏன் சந்தித்தார் என அவரிடம் கேளுங்கள். நான் யாரையும் எதிர்பார்ப்பவன் இல்லை. அதிமுக சுதந்திரமாக செயல்படும் கட்சி" என்று தெரிவித்துள்ளார்.