Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்” - இபிஎஸ் வலிறுத்தல்!

திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
07:10 PM Jun 23, 2025 IST | Web Editor
திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Advertisement

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு காவல் துறையில் துவக்க நிலையில் பணியில் சேரும் காவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் (10 5 10) என்ற முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, பணியில் சேரும் இரண்டாம் நிலைக் காவலர்கள் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு முதல் நிலைக் காவலர்களாகவும், தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தலைமைக் காவலர்களாகவும், அதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அதவாது 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு பெறுவார்கள்.

இந்நிலையில், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், திமுக அரசு காவல் துறையினருக்கு பதவி உயர்வில் மிகப் பெரிய சலுகை ஒன்றை அளிப்பதுபோல், கடந்த 13.6.2025 அன்று செய்தி வெளியீடு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் நிலைக் காவலர்களாக 10 ஆண்டுகளும்; முதலாம் நிலைக் காவலர்களாக 3 ஆண்டுகளும்; பிறகு தலைமைக் காவலர்களாக 10 ஆண்டுகளும் பணிபுரிந்தபின், அதாவது 23 ஆண்டுகால பணிக்குப் பிறகு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுவார்கள் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, முதலாம் நிலைக் காவலராக 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை, 3 ஆண்டுகளாகக் குறைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' என்று வாயளவில் நாடக வசனம் முழங்கிவிட்டு, 'சொல் வேறு, செயல் வேறு' என்று செயல்படுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார், காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கடந்த 2021 திமுக தேர்தல் அறிக்கை எண். 389-ல், 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஓட்டுக்காக வாக்குறுதி அளிப்பதும், அதிகாரம் கைக்கு வந்தவுடன் அவைகளைக் காற்றிலே பறக்கவிடுவதும் திமுக-விற்கு கை வந்த கலை. இந்தப் புதிய பதவி உயர்வு உத்தரவால், புதிதாக பணியில் சேரும் காவலர்களுக்கு ஏதாவது பலன் இருக்குமோ, இல்லையோ, 2001-2005 காலகட்டங்களில் பணியில் சேர்ந்த சுமார் 35,000 காவலர்களுக்குப் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் என்றும், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்றும் காவலர்கள் தெரிவிக்கின்றனர். மக்களைக் காக்கும் பணியில் உள்ள பெரும்பாலான காவலர்கள் பாதிக்கப்படக்கூடிய இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும், பணியில் உள்ள காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், 2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும்  திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Tags :
ADMKDMKEPSMKStalinTNGovtTNPolice
Advertisement
Next Article