For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பருவமழைக் காலம் தீவிரமடைந்துள்ள நிலையில் நாய்களிடையே அதிகரிக்கும் பார்வோ வைரஸ்!

10:42 AM Dec 15, 2023 IST | Web Editor
பருவமழைக் காலம் தீவிரமடைந்துள்ள நிலையில் நாய்களிடையே அதிகரிக்கும் பார்வோ வைரஸ்
Advertisement

பருவ மழைக் காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், பார்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Advertisement

சென்னையில் மட்டும் நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட நாய்கள், பார்வோ வைரஸ் பாதிப்புகளுடன் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைகளுக்கும், கிளீனிக்குகளுக்கும் அழைத்து வரப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: 

"கால்நடைகளிடத்திலும் குறிப்பாக நாய்களிடத்திலும்  பார்வோ வைரஸ் தொற்று வேகமாக பரவக் கூடியது. பார்வோ வைரஸ் தொற்று ஏற்பட்ட நாய்கள் சோர்வுடன் காணப்படும். காற்றின் மூலமாக பரவும் இந்நோயானது விலங்குகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். அதன் தொடர்ச்சியாக வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும். அதற்கு உடனடியாக சிகிச்சையளிக்காவிடில், நாய்கள் இறக்க நேரிடும்.

இதையும் படியுங்கள் : சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்தாலும் போர் தொடரும் – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் திட்டவட்டம்!

பார்வோ வைரஸால் பாதிக்கப்பட்ட நாயின் எச்சம், சிறுநீர், மலத்தில் இருந்து கிருமிகள் காற்றில் பரவி பிற நாய்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். அதேவேளையில், தடுப்பூசி செலுத்தினால், அந்த நோய் ஏற்படாமல் கால்நடைகளை காக்கலாம்.

பொதுவாக நாய்களுக்கு 3 தவணை பார்வோ வைரஸ் தடுப்பூசிகளும், 2 தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும். ஆனால், பலர் அதனை சரிவர செலுத்துவதில்லை. இதன் விளைவாகவே தற்போது பார்வோ வைரஸ் நோய் அதிகரிக்கிறது.

பார்வோ வைரஸ் பெரும்பாலும் மழைக் காலங்களில் வேகமாக பரவக் கூடியது. ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த காலகட்டத்தில் சென்னையில் நாளொன்றுக்கு 130 முதல் 150 நாய்கள் வரை பார்வோ வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதுண்டு. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 2 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

முறையாக தடுப்பூசிகள் செலுத்தாமல் தவறவிடுவதே அதற்கு முக்கியக் காரணம். ரேபிஸ் தடுப்பூசியின் விலை ரூ.50-க்கும் குறைவு. அதேவேளையில், பார்வோ வைரஸ் தடுப்பூசி ரூ.300-க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் அந்தத் தடுப்பூசிகளை தங்களது செல்லப் பிராணிகளுக்கு செலுத்தவில்லை." 

இத்தகைய காரணங்களால்தான் தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளது  என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement