ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - நீதிமன்றத்தில் வெடிகுண்டு மாற்றிய வழக்கறிஞர் ஹரிஹரன் ஜாமின் மனு தள்ளுபடி!
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பயன்படுத்துவதாக இருந்த வெடி குண்டுகளை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் (அம்பேத்கர் சிலை அருகே) வைத்து மற்ற குற்றவாளிகளுக்கு மாற்றி கொடுத்ததாக காவல்துறையால் 17வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஹரிஹரன் 112 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமின் வழங்கக்கோரி எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பு, வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை காவல்துறை தாக்கல் செய்தது.
இதனால் நிலுவையில் விசாரணை இருந்த போது, ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் ஹரிஹரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமின் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை திரும்ப பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.