ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மனு...!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை மாதம் 5ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நாகேந்திரன் சமீபத்தில் உடல் நல பாதிப்பால் மரணம் அடைந்தார்.
இந்த சூழலில், இந்த வழக்கை காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தன்னையும் இடையீட்டு மனுதாரராக சேர்க்க கோரியும், இந்த வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார் .