அரசு நிகழ்ச்சியில் திமுக எம்பி, எம்எல்ஏ இடையே வாக்குவாதம் - ஒருமையில் வசைபாடியதால் அதிர்ச்சி!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், திமுக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் முதற்கட்டமாக கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கட்டுமான நல வாரியத்தின் சார்பில் விபத்து நிவாரண தொகைக்கான ஆணையை தேனி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க முற்பட்டார். அப்போது ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நிவாரண தொகைக்கான ஆணையை கையில் இருந்து பறித்து இது நான் வாங்கி கொடுத்தது, நான் தான் கொடுப்பேன் என பொதுமக்கள் முன்னிலையில் பயனாளிக்கு கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை ஆட்சியர் முன்னிலையில் ஒருமையில் பேசினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி நன்றி உரை கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தனர்.
ஏற்கனவே நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் என யாரும் கலந்து கொள்ளாமல் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், திமுக எம்எல்ஏ பொதுமக்கள் முன்னிலையில் ஒருமையில் பேசிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.