வாக்களிக்க சொந்த ஊர் செல்கிறீர்களா நீங்கள்? இதோ உங்களுக்குதான் இந்த செய்தி!
மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 2,970 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. வரும் ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக பலரும், தாங்கள் வாக்காளர்களாக உள்ள தொகுதிகளுக்குச் செல்வார்கள்.
அதேபோல் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதில் பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு திரும்ப 2,295 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மக்களவை தேர்தலையொட்டி மொத்தமாக 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம், காரைக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, சேலம் திருப்பூர் என பல்வேறு ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்.19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதையொட்டி, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.