"எம்.எல்.ஏ-வை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குவதா?" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
சேலத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சென்ற பாமக எம்எல்ஏ அருள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"சேலத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குவதா? திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் ரூ.4.5 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை திமுகவினர் தடுத்து நிறுத்தி தள்ளி விட்டுள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளின் மூன்றாண்டு கால தொடர் முயற்சியால் கொண்டு வரப்பட்டது ஆகும்.
ஒரு சட்டமன்ற உறுப்பினரை அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் அவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளக்கூட விடாமல் தடுப்பது தான் பாசிசம் ஆகும். மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அருளை தாக்கியவர்கள் மீது தமிழ்நாடு அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.