ஒரு போனில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்துபவரா நீங்கள்.. டிராயின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சி!
இரண்டு சிம்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஏதேனும் ஒரு சிம் கார்டுக்கு கட்டணம் செலுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்த தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் செல்போன் பயனாளர்களை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் டிராய் எனப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது. தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது ஆகிய பணிகளை இந்த ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் டிராய் சார்பில் பயனாளர்களின் நலன்களுக்காக வெளியிடப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது டிராய் அமைப்பு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி இரட்டை சிம்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஒரு சிம் கார்டிற்கு கூடுதல் கட்டணம் செலுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்த டிராய் முடிவு செய்துள்ளது. இதன்படி இரட்டை சிம்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஏதேனும் ஒரு சிம்கார்டை உபயோகிக்காமலோ, குறைவாகவோ பயன்படுத்தினாலோ, டெலிகாம் நிறுவனங்கள் மூலம் கட்டணம் வசூலிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல் இரட்டை சிம்கள் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இருப்பினும் இது ஒருமுறை கட்டணமா அல்லது வருடம் ஒருமுறை செலுத்தும் கட்டணமா என முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 19 சதவீத எண்கள் டூயல் சிம் மொபைலில் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக ட்ராய் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, டென்மார்க், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த வகையிலான கட்டணம் வசூலிக்கும் முறை அமலில் இருந்து வருகிறது. அதனை இந்தியாவிலும் செயல்படுத்த, டிராய் முடிவு செய்துள்ளது.