Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிறுவன் கடத்தல் வழக்கு - பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
08:56 PM Jun 28, 2025 IST | Web Editor
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
Advertisement

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டார். மேலும், கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்தார். ஜெயராமிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின்பு அவரை விடுவித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்படட உத்தரவை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். அதன்படி, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அந்த முன்ஜாமீன் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

Tags :
DelhikidnapLatest NewsNews UpdatesPoova PoovaiJagan MoorthySupreme courtTN News
Advertisement
Next Article