"தமிழை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் யாரும் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை"- அன்புமணி ராமதாஸ் பேட்டி!
தமிழை வைத்து ஆட்சிக்கு வந்தவர் யாரும் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 27-ம் தேதி முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரிசீலினையும் நிறைவு பெற்றது.
இதையும் படியுங்கள் : தென்காசி: சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை, பெரம்பூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரச்சாரம் செய்து வருகிறேன். வடசென்னை பாஜக தொகுதி வேட்பாளர் பால் கனகராஜுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். சென்னையில் ஆட்சி செய்வதன் பெயரில் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் என்ற பெயரில் வியாபாரிகளாக இருக்கிறார்கள். தங்கள் அதிகாரத்தை வைத்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த முறை முழுவதும் எங்களை ஆதரிக்க வேண்டும், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெறுவார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சி எந்த அமைப்புக்கும் கட்சிக்கும் துரோகம் செய்யாது. 2019 ஆம் ஆண்டு நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்ததால் தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். தமிழை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் இவர்கள், ஆனால் தமிழுக்கு இவர்கள் எதுவும் செய்யவில்லை.
தமிழ்நாட்டுக்கு இருக்கும் ஆபத்தை தவிர்க்க வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக
கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரு மூத்த தலைவர். அந்த பதவியை வைத்து இந்தியாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் பல நன்மையான திட்டங்களை அவர் கொண்டு வந்துள்ளார்" என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.