பரபரப்பு அடங்குவதற்குள் வந்த மற்றொரு அதிர்ச்சி... தேனியில் இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்!
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர்
கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 14-01-2025 அன்று காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் தனக்கு வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு விண்ணப்பித்தார். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் 14.01.2025 அன்று தேவதானப்பட்டி காவல் நிலையத்திலிருந்து வழக்கறிஞர் பாண்டியராஜனுக்கு சிசிடிவி காட்சிகள் வழங்கப்பட்டது.
இதில் தனது கட்சிக்காரருடன் தான் சென்று புகார் அளித்ததை நிரூபிப்பதற்காக அவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது, இளைஞர் ஒருவரை போலீசார் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பந்தப்பட்ட இளைஞர் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சின்னச்சாமி என்பவது மகன் ரமேஷ் என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் போலீசார் எதற்காக அந்த இளைஞரை தாக்கினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. இவர் மீது புகார் ஏதும் வரப்படவில்லை என்வும் இவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. புகார் மற்றும் வழக்கு இல்லாத நிலையில் எதற்காக போலீசார் இவரை சரமாரியாக இழுத்து வந்து தாக்கினார்கள், பின்னர் ஏன் விடுவித்தார்கள் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.
இந்த சிசிடிவி காட்சிகளில் போலீசார் ரமேஷை காவல் நிலையத்திற்குள் இழுத்து வருவதும், பின்னர் அவரை தாக்கியதும் பதிவாகியுள்ளது. ரமேஷ் ஒவ்வொரு காவல்துறை அதிகாரியின் காலில் விழுந்து தன்னை விட்டு விடும்படி கெஞ்சுகிறார். அப்போது, காவல் ஆய்வாளர் அபுதல்கா உள்ளிட்ட அனைத்து காவல் துறையினரும் அவரை மாறி மாறி ஷூ காலால் மிதித்து தாக்குகின்றனர். மற்றொரு காவலர் ஒருவர் ரமேஷின் கண்ணத்தில் தொடர்ந்து பலமுறை அறிகிறார். மேலும் போலீசார் சரமாரியாக மாறி மாறி அவர் மீது தாக்குதல் நடத்தியதும் தெரிகிறது.
ஒரு காட்சியில் ரமேஷ் அதே இடத்தில் படுத்து இருக்கிறார். அப்போது உள்ளே வந்த காவலர் ரமேஷை காலால் எட்டி உதைத்து எழுப்புகிறார். பின்னர் ரமேஷை லத்தியை கொண்டு தாக்குகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் சரமாரியாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு மற்றொரு இளைஞர் போலீசாரால் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவாக காண...