மியான்மரில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!
மியான்மரில் கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. மேலும் பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 700 ஐ கடந்தது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மியான்மரில் மீண்டும் இன்று (ஏப்ரல் 13) காலை 7.54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.