மணிரத்னம் - கமல் கூட்டணியில் மற்றொரு நாயகனா? - ‘தக் லைஃப்’ திரைவிமர்சனம்!
டெல்லியில் தாதாவாக இருக்கும் கமல்ஹாசன் உயிரை ஒரு சூழ்நிலையில் காப்பாற்றுகிறார் சிறுவனான சிம்பு. அவரை தனது மகன் போல வளர்க்கிறார் கமல். ஆனால், வளர்ந்தவுடன் ஒரு காலகட்டத்தில் கமல் உயிரை எடுக்க நினைக்கிறார் சிம்பு. அது ஏன்? என்ன நடந்தது என்பது தக்லைப் படக்கதை.
டெல்லியில் உள்ள கமல் டீம், போலீஸ் மோதலில் கதை தொடங்குகிறது. அந்த ஏரியாவில் பேப்பர்போடும் சிறுவனான சிம்பு, அவர் தங்கை, அவர் அப்பாவுக்கு என்ன நடக்கிறது என்பதில் இருந்து கதை விறுவிறுப்படைகிறது. சிம்பு வளர்ந்தவுடன் ஒரு சூழ்நிலை காரணமாக கமல் ஜெயிலுக்கு போக, அவர் பொறுப்பில் இருந்து அந்த டீமை வழிநடத்துகிறார். இதற்கிடையில், தாதா டீமில் ஈகோ, கமல், அவர் மனைவி அபிராமி , காதலி திரிஷா காதல், எதிரணியில் கோபம், போலீஸ் துரத்தல் என கதை நகர்கிறது. ஒரு கட்டத்தில் தன்னை வளர்த்த கமலை கொல்ல சிம்பு நினைக்க, கமல் எப்படி பதிலடி கொடுக்கிறார் என்பதை தனது பாணியில் எடுத்துள்ளார் மணிரத்னம்.
இளைஞனாக, சற்றே முதுமை அடைந்தவராக, பல கெட்-அப்புகளில் வருகிறார் கமல்ஹாசன். அவருக்கும் சிம்புவுக்கான பாசம், சண்டையே முக்கியமான கரு என்றாலும், மனைவி அபிராமியுடன் அன்பு, டான்ஸர் திரிஷாவுடன் காதல், அண்ணன் நாசருடன் முரண் என பல இடங்களில் பண்பட்ட நடிகராக அசத்துகிறார் கமல்ஹாசன். குறிப்பாக, சண்டை காட்சிகளிலும் பின்னி எடுத்து இருக்கிறார். அவருக்கு சற்றும் சளைக்காமல் நல்ல நடிப்பை தந்து இருக்கிறார் சிம்பு. இடைவேளைக்குபின் அவர் கேரக்டர் வேறுதிசைக்கு மாற, கதையும் வேகமடைகிறது. ஒரு சில சீன்களில்தான் கமல் மனைவியாக வருகிறார் அபிராமி. அவை அனைத்தும் செம. கமல் காதலியாக வரும் திரிஷாவின் பிளாஷ்பேக், அவருக்கும் கமலுக்குமான ரொமான்ஸ், இடைவேளைக்குபின் அவருக்கும் சிம்புவுக்குமான சீன்கள் நன்றாக வந்து இருக்கிறது.
இவர்களை தவிர, சிம்பு அண்ணனாக வரும் நாசர், டீமில் இருக்கும் ஜோஜோ, கமல் மகளாக வரும் சஞ்சனா, தாதா டீமில் இருக்கும் பகவதிபெருமாள், வில்லன்கள் என அனைவரும் ஸ்கோர் செய்து இருக்கிறார்கள். வையாபுரி, சேத்தன், சின்னி ஜெயந்த், மகேஷ் மஞ்சுரேக்கர் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்கள். சில சீன்களில் திரிஷாவுடன் வரும் வடிவுக்கரசியும் மனதில் நிற்கிறார். போலீஸ் அதிகாரி அசோக்செல்வன் மிடுக்காக இருக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும், ஐஸ்வர்யலட்சுமி கேரக்டரும், அவர் பேசும் வசனங்களும் நச். படத்தின் பலமே கடைசி அரை மணி நேர டிவிஸ்ட், வசனங்கள், எமோஷனல்தான்.
தாதா கதை என்பதால் மாறி மாறி சண்டைபோடுகிறார்கள், சுட்டுக்கொண்டு இருக்கிறார்கள், செத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு கட்டத்தில் போரடிக்கிறது. சில டிவிஸ்ட் இருந்தாலும், அது வீக். இடைவேளைக்குபின் கதையின் போக்கு மாறுகிறது. ஆனால், படம் ரொம்பவே போராடிக்கிறது. வயதானவராக கமலை காண்பிப்பது ஓகே. ஆனால், அவர் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைலில் கவனம் செலுத்தி இருக்கலாம். அழகான கமலை அப்படி பார்ப்பது பலருக்கும் விருப்பம் இல்லை. திரிஷா கேரக்டர் ஆரம்பத்தில் அழுத்தமாக இருந்தாலும் இடைவேளைக்குபின் அப்படி மாறுவதை எளிதில் ஏற்க முடியவில்லை. பொன்னியின் செல்வனில் பார்த்த திரிஷாவை இதில் எக்ஸ்பரிமண்டல் கேரக்டராக, வேறுமாதிரி காண்பித்து இருக்கிறார் மணிரத்னம். அபிராமி, திரிஷா, வடிவுக்கரசி, வில்லன் டீமில் இருக்கும் பெண் என பல பெண்கள் கேரக்டர் ஏனோ பிற்போக்குதனமாக தவறாக காண்பிக்கப்படுகிறது.
டெல்லி, திருச்செந்துார், இமயமலை, கோவா பகுதிகளில் ரவி.கே.சந்திரன் கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. ஆனாலும் சுகர்பேபி, அஞ்சுவண்ண பூ பாடலை தவிர மற்ற இடங்களில் ஏமாற்றம் தந்து இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். செக்கச்சிவந்தவானம் உள்ளிட்ட சில தாதா படம் பார்க்கிற பீலிங் பல இடங்களில் வருகிறது. அதை மணிரத்னம் தவிர்த்து இருக்கலாம். கிளைமாக்ஸ் சில நிமிடங்கள் மட்டுமே அழுத்தமாக இருக்கிறது. அதற்கு முந்தைய காட்சிகள் சலிப்பு. இவர்கள் கூட்டணியில் பாடல்கள் சுமார். அளவுக்கு அதிகமான வன்முறை, சண்டைக்காட்சிகளை குறைத்து இருந்தாலே படம் நன்றாக வந்து இருக்கும்.
மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு, திரிஷா என பலர் இருப்பதால் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும், ஆக்ஷன் கதைக்களம் என்பதால் பழிவாங்கும் காட்சிகளுக்கு மட்டுமே கதையி்ல் முக்கியத்துவம் இருக்கிறது. கமல்ஹாசன், சிம்பு ரசிகர்களுக்கு ஓரளவு பிடிக்கும். சந்தோஷமாக குடும்பத்துடன் பார்க்க, குழந்தைகளுடன் பார்க்க அவ்வளவு உகந்தது அல்ல. ஆனால், மணிரத்னம், கமல் கூட்டணியாச்சே? நாயகன் மாதிரி இருக்குமா என்று நினைத்து சென்றால் பெரிய ஏமாற்றமே மிஞ்சும்
-மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்.