அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு - தீர்ப்பு தேதி குறித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம்!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த பிரியாணி கடை ஓனர் ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணையில் ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்டுது ஞானசேகரனின் கூட்டாளிகளான சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த குணால் சேட், பொள்ளாச்சியைச் சேர்ந்த முரளிதரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே ஞானசேகரன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் சிபிசிஐடி-யிடம் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டும் உறுதிபடுத்தப்பட்டதையடுத்து மேலும் ஒரு பாலியல் வழக்கு ஞானசேகரன் மீது பாய்ந்தது. ஞானசேகரன் மீது இதுவரை 35 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 5 வழக்குகளில் ஞானசேகரன் குற்றவாளி என்றும் 9 வழக்குகளில் விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மற்ற வழக்குகளின் இறுதி விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை, முன்னதாக சிறப்புப் புலனாய்வு குழு விசாரித்தது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி உட்பட பலரிடம் விசாரணை நடத்தது. இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு எதிராக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வரும் மே 28 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.