For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு - ஞானசேகரனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் நீதிமன்றக் காவலை நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
09:01 PM Jan 27, 2025 IST | Web Editor
அண்ணா பல்கலை  மாணவி வழக்கு   ஞானசேகரனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
Advertisement

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பாக போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் வன்கொடுமை வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.

Advertisement

மேலும் விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளபோது அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை காவல் ஆணையர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த சூழலில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை FIR ஆவணம் எவ்வளவு நேரம் டவுன்லோட் செய்யும் வகையில் இருந்தது? மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார்?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை காவல் ஆணையர் மீதான உயர்நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, 7 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், ஞானசேகரன் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, ஞானசேகரனை பிப். 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஞானசேகரன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisement