ஆந்திரா: காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தை சேர்ந்த உதய் (8), சாருமதி (8), சரிஷ்மா (6), மனஸ்வி (6) ஆகிய நான்கு சிறுவர் சிறுமியர் விளையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வராததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களைத் தேடிப் பார்த்தபோது மகளிர் மன்ற அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் அவர்கள் நான்கு பேரும் மயங்கி கிடப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து நான்கு பேரையும் மீட்ட பெற்றோர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நான்கு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். காருக்குள் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்த சாருமதி மற்றும் சரிஷ்மா ஆகியோர் சகோதரிகள் ஆவர்.
இந்த சம்பவத்தால் துவாரபூடி கிராமத்தில் துக்கச் சூழல் நிலவியது. மரணமடைந்த சிறுவர், சிறுமிகளின் பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.