நடைபாதையில் தூங்கியவர் மீது சொகுசு காரை ஏற்றி உயிரிழப்புக்கு காரணமான ஆந்திர எம்.பி. மகளுக்கு ஜாமின்!
பெசன்ட் நகரில் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது காரை ஏற்றி உயிரிழப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் ஆந்திர எம்.பி. மகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 22). இவர் நேற்று மாலை பெசன்ட் நகர் காலாசேத்ரா காலனி வரதராஜ் சாலை அருகே நடைபாதையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது, அந்த சாலையில் தாறுமாறாக வந்த சொகுசு கார் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் சூர்யா மீது ஏறி இறங்கியது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சூர்யாவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடைபாதையில் படுத்து உறங்கிய இளைஞர் சூர்யா மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய காரில் இரு பெண்கள் இருந்துள்ளனர். இதில் காரை இயக்கிய பெண் விபத்தை ஏற்படுத்திய உடன் சம்பவ இடத்திலிருந்து காருடன் தப்பி சென்றுவிட்டார். காரில் உடன் அமந்திருந்த பெண் விபத்து குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவரும் அங்கிருந்து தப்பியோடினார். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த இரு பெண்களும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : ரூ.800 மட்டும் வைத்து ரூ.6,000-க்கு ஷாப்பிங் செய்த பெண்! டேட்டிங் கலாச்சாரம் குறித்து விவாதத்தை கிளப்பிய சமூக வலைதள பதிவு பதிவு!
இதனை தொடர்ந்து நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் மீது காரை ஏற்றி கொன்றுவிட்டு தப்பியோடிய பெண்களை கைது செய்யக்கோரி சூர்யாவின் உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். விபத்து நேற்று மாலை ஏற்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகள், கார் பதிவெண், தப்பியோடிய பெண்களின் புகைப்படங்கள் ஆகிய ஆதாரங்கள் இருந்தும் அவர்களை போலீசார் கைது செய்யவில்லை என உயிரிழந்த சூர்யாவின் உறவினர்கள் பெசன்ட் நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெசன்ட் நகரில் கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய பெண்ணை காவல்துறையின்ர கைது செய்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது ஆந்திர எம்.பி.யின் மகள் பீடா மாதுரி என்பது தெரியவந்தது. இதையடுத்து, பீடா மாதுரியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியது ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.யின் மகள் பீடா மாதுரி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர் விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் மீது 304 (a) என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது பிணையில் வரக்கூடிய சட்டப்பிரிவு என்பதால் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார்.