“இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா” - ஆர்.பி. உதயகுமார்!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டி உள்ளார். கட்சிக் கூட்டத்தில் அமித்ஷாவை புகழ்ந்து ஆர்.பி. உதயகுமார் பேசிய காணொலி தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் பேசியதாவது:
“இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேலின் மறு வடிவமாக பார்க்கப்படும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இரண்டு மணிநேரத்துக்கு மேலாக தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருப்பது பற்றி பல கருத்துகள் எழுந்துள்ளன.
ஆனால், தமிழகத்தின் நலனுக்காக அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். இருமொழிக் கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்” எனத் தெரிவித்தார்.