“ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா?” - கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தான் வாங்க உள்ளதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், ஆர்சிபி அணியை வாங்க நான் பைத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார். வதந்திகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே. சிவகுமார்,
“எனக்கு ஏன் ஆர்.சி.பி தேவை?. நான் ஏன் அதை வாங்கப் போகிறேன்?. நான் ராயல் சேலஞ்ச் கூட குடிப்பதில்லை” என்று கூறினார். மேலும், தான் சிறு வயதிலிருந்தே கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் (கே.எஸ்.சி.ஏ) உறுப்பினராக இருந்து வருவதாகவும், அணியின் நிர்வாகத்தில் சேர வாய்ப்புகள் இருந்தபோதிலும் அதில் ஈடுபட அவருக்கு நேரமில்லை என்றும் கூறினார்.
பிரிட்டிஷ் பன்னாட்டு மதுபான நிறுவனமான டிஸ்டில்லரி நிறுவனத்தின் நிறுவனரும், ஆர்சிபியின் தற்போதைய உரிமையாளருமான டியாஜியோ பிஎல்சி, ஆர்சிபி அணியை விற்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த அணிக்கான உரிமத்தை டி.கே. சிவகுமார் வாங்குவதாக வதந்திகள் இணையத்தில் பரவத் தொடங்கின.
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இந்தாண்டு ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளின் மத்தியில் ஆர்சிபி அணி விற்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.